மதத்தின் பெயரை பொய்யாக கூறி மாணவியை ஏமாற்றி பலாத்காரம்: உ.பி-யில் கல்லூரி மாணவர் கைது

 

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மதத்தின் பெயரை பொய்யாக சொல்லி மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் 21 வயது மாணவி படித்து வருகிறார். இவரிடம் அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் 22 வயதான முகமது தானிஷ் என்ற மாணவன், தனது மதத்தின் பெயரை மறைத்து அறிமுகமாகிப் பழகி வந்துள்ளான். அந்த மாணவியின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, அவரைத் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு, வெளியே சொன்னால் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார். இதற்கிடையில் தன்னுடன் பழகிய நபர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதும், தன்னை ஏமாற்றியதும் அந்த மாணவிக்குத் தெரியவந்துள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், லக்னோ போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். மத அடையாளத்தை மறைத்து ஏமாற்றுதல், மிரட்டல் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும், உத்தர பிரதேச மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழும் முகமது தானிஷ் மீது கடும் பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ‘இந்தச் சம்பவம் தொடர்பாகப் பல்கலைக்கழக நிர்வாகமும் தனியாகத் துறைரீதியான விசாரணையைத் தொடங்கியுள்ளது’ என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: