நெல்லை: நெல்லை மானூர் அருகே செழியநல்லூரில், 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டும் ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்த பீரங்கிக் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 450 ஆண்டுக்கு முன்புள்ள வரலாற்றை ஆய்வு செய்ய வாய்ப்பு கிட்டியுள்ளதாக தொல்லியல் துறை மாணவர்கள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகள் இன்றளவும் மன்னர்கள் காலபல்வேறு கல்வெட்டுகளை உடையதாக உள்ளது.
இதற்கான வரலாற்றுச் சான்றுகள் மானூர் அருகேயுள்ள அழகியபாண்டியபுரம், செழியநல்லூர் பகுதிகளில் கிடைத்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் 2ம்ஆண்டு பயின்று வரும் மாணவர் பிரித்திவ்ராஜ், மானூர் பகுதியில் மேற்கொண்ட களஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய கட்டடத்திற்கு அருகே ஒரு கல்வெட்டை கண்டுபிடித்தார். அந்த கல்வெட்டு உள்ள தூணின் ஒரு புறத்தில் சங்கு மற்றும் சக்கர உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அதற்கு கீழ்ப்பகுதியில் இருந்து தற்காலத் தமிழில் கல்வெட்டு வாசகங்கள் தொடங்குகின்றன. தொல்லியல் துறை உதவி பேராசிரியர்கள் மதிவாணன், முருகன் மற்றும் தொல்லியலாளர் மீனா ஆகியோர் கல்வெட்டை வாசித்து ஆய்வு செய்தனர். இந்த கல்வெட்டு கொல்லம் ஆண்டு 748, தை மாதம் 28ம் நாள் நிறுவப்பட்டுள்ளது. இது சுமார் 453 ஆண்டுகள் பழமையானது எனவும் தெரிகிறது. இது திருவிடையாட்டம் என்ற நில தானத்தை விளக்குகிறது. அதாவது, அக்காலத்தில் மன்னர்களோ அல்லது செல்வந்தர்களோ கோயிலின் நித்ய பூஜைகளுக்காக நிலங்களை வழங்கியதை இது குறிக்கிறது.
கல்வெட்டில் திருவேங்கடநாதர் என்ற கடவுள் பெயர் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அந்தப் பகுதியில் ஒரு காலத்தில் பழமையான பெருமாள் கோயில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. கல்வெட்டில் புறவாரி என்ற சொல் காணப்படுகிறது. இதற்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் மீதான அரசாங்க வரிகள் நீக்கப்பட்டு, அந்த வருமானம் முழுவதும் கோயிலை சென்றடைய வேண்டும் என்பது பொருளாகும். தூணின் பெரும்பகுதி மண்ணில் புதைந்துள்ளதால், அதனைத் தோண்டி எடுத்தால் முழுமையான தகவல்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, செழியநல்லூர் பகுதியில் உதவிப் பேராசிரியர் மதிவாணன் பழங்காலக் கருங்கல்லாலான பீரங்கி குண்டு ஒன்றைக் கண்டெடுத்தார். இதுகுறித்து ஊர் மக்களிடம் விசாரித்தபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஒரு பெரிய வாகை மரம் விழுந்ததாகவும் அப்போது அதன் வேர்ப்பகுதியில் இருந்து இதுபோல நூற்றுக்கணக்கான குண்டுகள் வெளிப்பட்டதாகவும் தெரிவித்தனர். அவற்றைச் சிறுவர்கள் எடுத்து விளையாடி வந்த நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாத்து வைத்திருந்த சில குண்டுகளை எடுத்து வந்து ஒப்படைத்தனர்.
இந்த குண்டுகள் பெரும்பாலும் 2 அங்குல விட்டத்துடனும் ஒன்று மட்டும் 3 அங்குல விட்டத்துடனும் இருந்தன. இவை ஆங்கிலேயர் காலத்தை சார்ந்ததாக இருக்கலாம் என தொல்லியல் துறை பேராசிரியர் சுதாகர் தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தடயங்களை வெளிக்கொண்டு வந்த களஆய்வுக் குழுவினரை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார்.
