பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது!

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. போட்டியில் வெல்லும் வீரர்கள், காளைகளுக்கு தங்கக் காசு, கட்டில், பீரோ உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. அதிக காளைகளை பிடித்த வீரர், சிறந்த காளைகளுக்கு முதல் பரிசாக டிராக்டர்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது ஆண்டுதோறும்கொண்டாடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை.

தை முதல் நாளான தைப்பொங்கலன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடத்தப்படும்.

இதன்படி, இன்று (ஜன. 15) அவனியாபுரத்திலும், நாளை (ஜன. 16) பாலமேட்டிலும், நாளை மறுநாள் (ஜன. 17) அலங்காநல்லூரிலும் அனல்பறக்க ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன.

இந்தாண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 3,090 காளைகள், பாலமேட்டில் 5,747 காளைகள், அலங்காநல்லூரில் 6,210 காளைகள் என 15047 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டோடு ஒப்பிடும் போது 2,415 காளைகள் அதிகமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இந்தாண்டு மாடுபிடி வீரர்கள் அவனியாபுரத்தில் 1,849 பேர், பாலமேட்டில் 1,913 பேர், அலங்காநல்லூரில் 1,472 பேர் என 5,234 பேர் முன்பதிவுசெய்துள்ளனர்.

தகுதியான காளைகள் மற்றும் காளையர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. டோக்கன் அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். அவனியபுரத்தில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு டிராக்டர், சிறந்த வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Related Stories: