சென்னை: தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி, கால்நடை உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் 27 முத்திரை திட்டங்களின் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம், உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன் ஆகிய 6 துறைகளை சார்ந்த சுமார் ரூ.3,291 கோடி மதிப்பீட்டிலான செயல்பாட்டில் உள்ள 27 முத்திரை திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து தொடர்புடைய துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒலிம்பிக் அகாடமி, செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு மையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி அமைக்கும் பணிகள் பிப்ரவரி 2026க்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டுமென்று முதல்வர் அறிவுறுத்தினார்.
2030ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்கம் வெல்லுகின்ற வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சியினை வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு உரிய அறிவுரைகளை முதல்வர் வழங்கினார். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கீழ் கடம்பூரில் பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா, மரக்காணத்தில் சர்வதேச பறவை மையம், கடலூர் மாவட்டம், பிச்சாவரத்தில் சதுப்புநில பாதுகாப்பு மையம், தஞ்சாவூரில் சர்வதேச கடல் பசு பாதுகாப்பு மையம் மற்றும் சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைப்பதற்காக பிப்ரவரி, 2026 இரண்டாம் வாரத்திற்குள் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட வேண்டுமெனவும், மேலும் திண்டுக்கல்லில், தேவாங்கு பாதுகாப்பு மையம், அமைக்கும் பணி பிப்ரவரி 2026-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
* கடலூரில் புதிய நூலகம் அமைக்கும் பணி குறித்த ஆய்வு
கடலூரில் புதிய நூலகம் அமைப்பதற்கான ஒப்பந்த பணிகளை விரைந்து முடித்து பிப்ரவரிக்குள் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆற்காட்டுத் துறை, வெள்ளப்பள்ளம் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் திட்டக்குடியில் புதிய கால்நடை தீவன ஆலை அமைக்கும் பணிகள் பிப்ரவரி 2026க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, பொதுப்பணித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, உள்துறை செயலாளர் தீரஜ் குமார், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அதுல் ஆனந்த், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன், சிட்கோ தலைவர் கார்த்திக், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் சத்யபிரத சாகு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் சுப்பையன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
