×

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி ஆதி கொலை வழக்கில் கள்ளக்காதலி உட்பட 9 பேர் அதிரடி கைது

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு கொடுத்த கள்ளக்காதலி உட்பட 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க முயன்ற போது கால் தவறி கீழே விழுந்ததில் 2 பேருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் காவலர்கள் உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் ஆவடி ஏரிக்கரை தாழம்பூ தெருவை சேர்ந்த சுசித்ரா(21) கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கடந்த மாதம் 18ம் தேதி குழந்தை பிறந்தது. சற்று பலவீனமாக குழந்தை இருந்ததால் தாய் சுசித்ரா மற்றும் குழந்தை மருத்துவமனை வளாகத்திலேயே தொடர் சிசிச்சையில் இருந்தனர். இதற்கிடையே 25 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு சுசித்ராவின் குழந்தை நேற்று முன்தினம் இறந்தது. இதனால் சுசித்ராவின் முன்னாள் பள்ளி தோழனும், கள்ளக்காதலனான கொளத்தூர் மகாத்மா காந்தி நகர் 4வது தெருவை ேசர்ந்த ஆதி(எ) ஆதிகேசவனுக்கு (20) சுசித்ரா குழந்தை இறப்பு குறித்து தகவல் அளித்தார். அதன்படி ஆதி நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து குழந்தை இறப்பு குறித்து டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தகராறில் ஈடுபட்ட ஆதி மற்றும் சுசித்ராவின் உறவினர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

அதன் பிறகு சுசித்ரா மற்றும் அவருக்கு உதவியாக வில்லிவாக்கம் பொன்னாங்கிணறு தெருவை சேர்ந்த சாருமதி(23) இருந்தார். பிரச்னை முடிந்து சுசித்ரா, சாருமதி மற்றும் கள்ளக்காதலன் ஆதி ஆகிய மூன்று பேரும் மருத்துவமனை வளாகத்திலேயே மது அருந்திவிட்டு ஒன்றாக தூங்கியுள்ளனர். அப்போது நேற்று அதிகாலை 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மருத்துவனைக்குள் புகுந்து மது போதையில் இருந்த ஆதியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ரவுடி ஆதியை அவரது கள்ளக்காதலி சுசித்ரா இறந்த தனது குழந்தைக்கு நியாயம் கேட்க வரவழைத்ததும், பிறகு ஆதி மருத்துவமனைக்கு வந்த
தகவலை சுசித்ரா தனது தோழியான சாருமதி மூலம் ஆதியின் நண்பர்களுக்கு தகவல் அளித்ததும் தெரியவந்தது.

மேலும் கொலை நடந்த பகுதியை சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் நேரில் சென்று ஆய்வு செய்து, குற்றவாளிகளை படிக்க 9 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி தனிப்படையினர் உயிரிழந்த ஆதியின் கள்ளக்காதலி சுசித்ரா மற்றும் சாருமதியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, ராஜமங்கலம் காவல் எல்லையில் கடந்த 2022ம் ஆண்டு ரவுடி பழனி என்பவரை ஆதி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ளார்.

அதற்கு பழிவாங்கும் நோக்கில் பழனியில் ஆதரவாளர்கள் ஆதியை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்தனர். பழனி கொலை வழக்கில் ஆதி 2 ஆண்டுகள் சிறையில் இருந்து கடந்த 2ம் தேதி வெளியே வந்துள்ளார். அவரை எப்படியும் கொலை செய்ய வேண்டும் என்று பழனியின் ஆதரவாளர்கள் ஆதியின் கள்ளக்காதலி மற்றும் சாருமதி, ஆதியின் நண்பர்கள் உதவியுடன் தகவல்கள் சேகரித்தனர். அப்போது தான் சுசித்ராவின் குழந்தை இறப்புக்கு மருத்துவமனைக்கு ஆதியை வரவழைத்தனர். டாக்டர்களிடம் நடந்த பிரச்சனை முடிந்து ஆதி அங்கிருந்து புறப்பட முயன்றார். ஆனால் சாருமதி மற்றும் கள்ளக்காதலியான சுசித்ரா ஆகியோர் ஆதிக்கு மதுபானம் கொடுத்து தங்களுடன் தங்க வைத்தனர். அதிக போதையில் ஆதி இருக்கும் தகவலை இருவரும் பழனி ஆதரவாளர்களுக்கு கொடுத்துள்ளனர்.

அதன்படி பழனி ஆதரவாளர்கள் திட்டமிட்டு நேற்று அதிகாலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து மது போதையில் நிதானம் இல்லாமல் இருந்த ரவுடி ஆதியை வெட்டி கொன்று விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. அதை தொடர்ந்து தனிப்படையினர் ஆதியின் கள்ளக்காதலி சுசித்ரா, சாருமதியை கைது செய்தனர். மேலும், ஆதியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான வனக்குமார்(21), கார்த்திக் ராஜா(20), ராம்(22), ஜெயபிரதாப்(20), சூர்யா(19), அலிபாய்(21), அருண்குமார்(22) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.

தனிப்படை போலீசார் பிடிக்கும் போது வனக்குமார் மற்றம் கார்த்திக் ராஜா ஆகியோர் தப்பித்து ஓடினர். அப்போது இருவரும் கால் தடுக்கி விழுந்ததில் இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை தனிப்படையினர் மருத்துவமனையில் அனுமதித்து மாவுக்கட்டு போட்டனர். பின்னர் கொலையாளிகளிடம் இருந்து 4 பட்டாக்கத்திகள், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் கவனக்குறைவாக இருந்த முதல்நிலை காவல் நரேந்திரன், பெண் காவலர்கள் சரிதா, அம்பிகா நீலாவதி ஆகிய 4 பேரை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ேமலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க தவறியதாக கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் துரை மற்றும் கொலை நடந்த அன்று பொறுப்பு அதிகாரியாக இருந்த கீழ்ப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Kilpauk ,Adi ,Chennai ,Kilpauk government ,
× RELATED உல்லாசமாக இருந்து விட்டு காதலியின்...