வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் மனு

*கலெக்டர் தர்ப்பகராஜிடம் வழங்கினர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. அப்போது, வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது, அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, சுய தொழில் கடனுதவி, வேலைவாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம், சாலை வசதி, குடிநீர் வசதி, தாட்கோ கடனுதவி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 362 பேர் மனு அளித்தனர்.

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது, விரைந்த நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

மேலும், கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மனு அளிக்க காத்திருந்த மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கலெக்டர் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். உதவி உபகரணங்கள் கோரி அளிக்கப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், போளூர் தாலுகா, வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த 86 ஆதி திராவிடர் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

எனவே, அதன் அடிப்படையில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தை கிராம கணக்கில் ஏற்றி, உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல், திருவண்ணாமலை அண்ணா நகர் 9வது தெருவைச் சேர்ந்த பொதுமக்கள், அந்த பகுதியில் உள்ள பொது பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர்.

இந்நிலையில், குறைதீர்வு கூட்டத்தின்போது, தீக்குளிக்கும் சம்பவங்களை தவிர்க்க, கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் கொண்டுசென்ற பொருட்களை சோதித்த பிறகே அலுவலகத்துக்குள் அனுமதித்தனர். மேலும், நேற்று விட்டு விட்டு லேசான மழை பெய்ததால், குறைதீர்வு முகாமிற்கு பொதுமக்களின் வருகை குறைந்திருந்தது.

Related Stories: