கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் ‘வா வாத்தியார்’ பட உரிமையை ஏலம் விட வேண்டும்: சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடனை திரும்ப செலுத்தாததால் ‘வா வாத்தியார்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சொத்தாட்சியர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், திவாலானவர் என்று அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் பெற்ற 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள வா வாத்தியார் திரைப்படம் வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பணத்தை திரும்ப செலுத்த ஞானவேல் ராஜா எந்த தீவிர முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி கடன் தொகையை திரும்ப செலுத்தும் வரை “வா வாத்தியார்” படத்தை வெளியிடகூடாது என்று தடை விதித்தது.

இந்நிலையில், 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்த பட நிறுவனம் தயாராக இருப்பதால், படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனக்கோரி ஞானவேல் ராஜா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள், எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் ஏற்கனவே போதுமான கால அவகாசம் அளித்து விட்டது. படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது. ‘வா வாத்தியார்’ படத்தின் உரிமைகளை சொத்தாட்சியர் ஏலம் விடலாம் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: