சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.560 உயர்ந்தது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2ம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. 2ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 640க்கு விற்றது. 3ம் தேதி தங்கம் விலை காலையில் பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.1,00,160க்கும், மாலையில் மீண்டும் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 800க்கு விற்பனையானது. 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
தொடர்ந்து, நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் உயர்வை தான் சந்தித்தது. அதிலும் காலையில் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,01,440க்கும், மாலையில் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 2,080க்கும் விற்பனையானது. காலை, மாலை என ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் காலை, மாலை என ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.9 ஆயிரம் உயர்ந்தது.
இந்நிலையில், நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,830க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,02,640க்கும் விற்றது. இதே போல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.271க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, பார் வெள்ளி ரூ,2,71,000க்கும் விற்பனையானது. தங்கம், வெள்ளி மீண்டும் அதிகரித்து கொண்டே செல்வது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
