சென்னை: பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் 8ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதையடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ.248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு கடந்த வாரம் அரசாணை வெளியிட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தகவல் தெரிவித்தது. இதனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு மட்டும்தானா? ரொக்கப் பணம் கிடையாதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.
அதேநேரம், பொங்கல் பரிசு தொகுப்புடன் எவ்வளவு ரொக்க பணம் வழங்குவது என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் முடிவில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், “பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடிட தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட தமிழ்நாடு முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதன்மூலம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000 வழங்கிட மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலை கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரும் ஜனவரி 8-ம் தேதி (நாளை மறுதினம்) சென்னை ஆலந்தூர் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு தொடங்கி வைக்கிறார். அதேநேரம், மற்ற மாவட்டங்களில் அந்தந்த அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்கின்றனர். பொதுமக்கள் 8ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம். ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க, வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த டோக்கனில் உள்ள தேதி, நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.
