ஊட்டி: ஊட்டி தேயிலை பூங்காவில் 80 ஆயிரம் சைப்பரஸ் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பண்ணைகளில் பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள், மூலிகை நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் பழ ரசங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் பல்வேறு வகையான வாசனை திரவிய பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. பூங்கா மற்றும் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான பழங்கள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வது மட்டுமின்றி, ஜாம், ஊறுகாய் போன்றவை தயாரிக்கப்படுகிறது.
இது தவிர விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி அருகே தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் சைப்பரஸ் உட்பட பல்வேறு வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவைகள் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதற்காக தற்போது தேயிலை பூங்காவில் 80 ஆயிரம் சைப்பரஸ் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நாற்றுக்கள் விற்பனைக்கு தயாராக உள்ளதால், அதனை விவசாயிகள் வாங்கிச் செல்லலாம் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.
