×

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லுமா?ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பயணிகள் எதிர்பார்ப்பு

 

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில், அதிகரித்து வரும் ரயில் பயணிகளின் நலனை கருதி, நீண்டதூர எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்று எதிர்ப்பார்கின்றனர். திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகர மக்களின் பிரதான ரயில் போக்குவரத்தாக இருப்பது ரயில் போக்குவரத்தே ஆகும். தென்னிந்தியாவில் ரயில் போக்குவரத்து 1.7.1856ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் நாள் ஒரு ரயில் ராயபுரத்தில் இருந்து வாலாஜாரோடு ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இரண்டாவது ரயில் அதே நாள் ராயபுரத்தில் இருந்து திருவள்ளூருக்கு இயக்கப்பட்டது. தென்னிந்தியாவில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்ட முதல் நாளிலேயே திருவள்ளூருக்கு ரயில் இயக்கப்பட்டது என்பது வரலாறு. அன்று முதல் இன்று வரை திருவள்ளூர் நகர மக்களுக்கு ரயில் போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தற்போது, திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 180 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், 11 ஜோடி எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. திருவள்ளூர் ரயில் நிலையத்தை நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தை என்எஸ்ஜி 2 (நான் சபர்பன் கிரேட் 2) என்று ரயில்வே நிர்வாகத்தால் தரம் பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு அடுத்த நிலையில் திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

ரயில்வே கோட்ட ரயில்வே தலைமை இடங்களான திருச்சி, சேலம் மற்றும் பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்கள் என்எஸ்ஜி 3 என்ற நிலையில் இருக்கும்போது, திருவள்ளூர் ரயில் நிலையம் அதற்கும் ஒரு படி மேலே என்எஸ்ஜி2 என்ற நிலையில் உள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட திருவள்ளூர் ரயில் நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் நீண்ட நாள் கனவாக தொலைதூரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகராக உள்ள திருவள்ளூர் ரயில் நிலையமானது, சென்னை புறநகர் புறநகர் மின்சார ரயில்களின் முனையமாகவும் உள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளது. இவற்றில் 4 நடை மேடைகள் 24 பெட்டிகளை கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் அளவு நீளம் கொண்டது. மேலும், நடைமேடை ஒன்று மற்றும் இரண்டு ஆகிய விரைவு ரயில்கள் நின்று செல்லும் நடைமேடையாக அமைந்துள்ளதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வது சுலபமாக அமைந்துள்ளது.

இந்த நடைமேடைகளில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல கூடுதலாக 4 நிமிடங்கள் மட்டுமே செலவாகும். இதனால், ரயில்வே கால அட்டவணை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த 4 நிமிட நேரத்தை வண்டி செல்லும் வேகத்திலேயே ஈடுசெய்ய முடியும்.
திருவள்ளூர் நகரம் ஒரு முக்கிய தொழில் நகரமாகவும் வளர்ந்து வருகிறது.

திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கேட்டர்பில்லர், டெல்பி டிவிஎஸ், டிசிஎல் உள்பட பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளது. அதேபோல் காக்களூர் தொழில்பேட்டையில் சுமார் 200 தொழில் நிறுவனங்கள்அமைந்துள்ளன. இது திருவள்ளூர் நகருக்கு மிக அருகில் அமைந்துள்ளது. சென்னையின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டை திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த சுங்குவாசத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டைகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு உகந்த ரயில் நிலையமாக திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. மேலும், அங்குள்ள பல நிறுவனங்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் திருவள்ளூர் மற்றும் மணவாளநகர் அவைகளை சுற்றியுள்ள பகுதிகளில் தாங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களையே பெரிதும் நம்பியுள்ளனர்.
திருவள்ளூர் நகரம் கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போது, திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையும் அமைந்துள்ளது.

திருவள்ளூர் நகரை சுற்றி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. மேலும் திருவள்ளூர் நகராட்சியில் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளன.

இந்நிலையில், சென்னையில் பணிபுரியும் பலரும் திருவள்ளூர் நகரில் குடி பெயர்ந்து வருகின்றனர். சென்னை சென்றுவர புறநகர் ரயில்கள் இருப்பதால் தினமும் சென்னைக்கு சென்று வருகின்றனர். எனவே, நாளுக்கு நாள் திருவள்ளூரில் இருந்து ரயிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 37 லட்சம் மக்கள் உள்ளனர். கடந்த 14 ஆண்டுகளில் மேலும் பல லட்சம் மக்கள் தொகை அதிகரித்து உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில், ரயில் போக்குவரத்து வசதியை இதுவரை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை. பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என ரயில் பணிகள் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த 2020ம் ஆண்டு கொரோன காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு 21 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் எவ்வளவு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணி புரிகின்றனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரியவந்தது.

எனவே, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிரந்தரமாக வடமாநில ஊர்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று சென்றால் பல்லாயிரகணக்கான ரயில் பயணிகள் பயன்படுத்தி பயனடைவார்கள். இதனால், ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாயும் அதிகரிக்கும். திருவள்ளூரில் நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வதால், திருவள்ளூர் மக்கள் மட்டுமல்லாது சென்னை – திருவள்ளூர் ரயில்வே மார்க்கத்தில் ஆவடி – திருவள்ளூர் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள பயணிகளும் சுலபமாக திருவள்ளூர் வரை புறநகர் மின்சார ரயில்களில் வந்து நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏறி தங்களது மாவட்டங்களுக்கும், தங்களது மாநிலங்களுக்கும் செல்ல ஏதுவாக இருக்கும். இதனால் சுமார் 10 லட்சம் மக்கள் பயனடைய வாய்ப்பிருக்கிறது.

மேலும் சென்னையின் புறநகர் பகுதியான போரூர், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம், திருமழிசை, வெள்ளவேடு, குத்தம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களும் மாநகர பேருந்துகள் மூலம் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்து விரைவு ரயில்களில் ஏரி செல்ல வசதியாக இருக்கும்.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெரும்பாலும் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றன. இது சென்னை புறநகர் பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. அதேபோல் புறநகர் ரயில்களின் முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் இருப்பதால் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்கின்றன. அதே போன்று திருவள்ளூர் ரயில் நிலையத்திலும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

திருவள்ளூரில் நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று சென்றால் சென்னை புறநகர் பகுதியில் உள்ள அனைத்து பயணிகளும் வசதியாக பயன்படுத்திக் கொள்வார்கள். திருவள்ளூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வதன் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்தையும், கூட்ட நெரிசலையும் குறைக்க முடியும்.

இது குறித்து பல ஆண்டுகளாக ரயில் பயணிகளும், ரெயில் பயணிகள் சங்கத்தினரும் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ரயில்வே நிர்வாகம் பயணிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமா என்பது பெரும்பாலான பயணிகளில் கோரிக்கையாக உள்ளது.

Tags : Tiruvallur ,Tiruvallur district… ,
× RELATED குன்றத்தூர் அருகே அரசு பஸ்-பைக் நேருக்கு நேர் மோதியதில் மாணவன் சாவு