மாணவர்களுக்கு மடிக்கணினியை அதிமுக அரசு தொடர்ந்து வழங்கி வந்தது என பொய் சொல்கிறார் பழனிசாமி: அமைச்சர் சிவசங்கர் குற்றசாட்டு

சென்னை: எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2019ம் ஆண்டிலேயே லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு ‘கல்விக்கான ஆயுதமாக மடிக்கணினியை, தொடர்ந்து வழங்கி வந்தது எனது அரசு’ எனப் பச்சைப் பொய் சொல்கிறார் பழனிசாமி என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் குற்றசாட்டு வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி’’ எனச் சொல்லும் பழனிசாமியின் அதிமுக, அடிமை கம்பெனியாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. 2016ம் ஆண்டிலிருந்து 2024ம் வரை தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற பழனிசாமி ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது’ என்று சொல்வதைக் கேட்டு சின்னக் குழந்தையும் சிரிக்கும்.

’’2021-ல் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 இடங்களில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இது அதிமுகவின் கோட்டை’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. அந்த 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் அடங்கியிருக்கும் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 221 தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பெற்றது பழனிசாமிக்கு தெரியாதா? அதிமுகவின் கோட்டையான சேலத்திலேயே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டை விழுந்ததை எல்லாம் மறந்துவிட்டாரா?55 ஆயிரம் மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமி, லேப்டாப் பற்றி எல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?

20 லட்சம் கல்லூரி மாணாக்கருக்கு லேப்டாப் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD, Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் உலத்தோடு போட்டியிடும் வகையில் ஒவ்வொரு திட்டமாக வகுத்து வருகிறது திமுக அரசு.

மகளிர், அரசு ஊழியர், மாணாக்கர் என ஒவ்வொரு பிரிவினரும் முதலமைச்சரின் திட்டங்களால் பயன்பெறுவதைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் குமைகிறார் பழனிசாமி. டீ கடையில் காசு இல்லாமல், ‘’டேய் ஒரு டீ குடிக்க எவ்ளோ நடிக்க வேண்டியது இருக்கு உங்க முன்னாடி’’ என வடிவேலு பேசும் காமெடிதான் பழனிசாமி பேசுவதைக் கேட்கும் போது நினைவுக்கு வருகிறது. டீ கடையில் இரண்டு பேப்பர் படிக்கும் போது அதில் உள்ள செய்திகளில் தனக்கு எல்லாம் தெரிந்தவர் போல வடிவேலு தலையிட்டு உதார் விடுவார். அப்படிதான் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் எல்லாம் தன்னால்தான் வந்தது என பழனிசாமி நடிக்க வேண்டியிருக்கிறது. மகளிர் உரிமத் தொகை, லேப்டாப், போன்றவற்றை அதிமுக குரல் கொடுத்ததால்தான் திமுக அரசு கொண்டு வந்தது என பழனிசாமி சொல்லிக் கொள்ளும் வரிசையில் இப்போது பொங்கல் பரிசுத் தொகுப்பிலும் பழனிசாமி தலையை நுழைத்திருக்கிறார்.

அடுத்து நாம் ஓர் திட்டம் கொண்டு வர முடிவு செய்தாலே, உடனே முந்திக் கொண்டு அதற்கு ஒரு கருத்தைச் சொல்லி, அது தன்னால்தான் வந்தது எனப் பெருமைப்பட்டு அரசியல் செய்வது எல்லாம் எதிர்க கட்சித் தலைவர் செய்யும் செயலா? “எல்லாமே என்னால்தான் நடந்தது” என்று ஒரு Mindsetஃபோபியா சிலருக்கு உண்டு. அதில், பழனிசாமியும் சேர்ந்து கொண்டார். “நான்தான் எல்லாம் செய்பவன்’’ என்ற “God Complex” அதாவது கடவுள் மனப்பான்மையில் பழனிசாமி வாழ்ந்து கொண்டிருக்கிறார். நம்முடைய திட்டங்கள் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் ஆதரவை எதிர்க் கட்சித் தலைவரே உணர்ந்ததால்தான் இப்படியெல்லாம் பேசி வருகிறார். பழனிசாமி அரசியல் செய்வதற்கும் நம்முடைய சாதனை திட்டங்கள் காரணமாக அமைந்திருக்கிறது. Election Eyewash-க்காக லேப்டாப் கொடுகிறார் என சொல்கிறார் பழனிசாமி. அவருடைய God Complex-ஐ என்ன சொல்ல?

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் புதுக்கோட்டையில் உரையாற்றி கொண்டிருந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, ‘’ஏப்ரலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வளர்ச்சி பாதையில் பங்கேற்போம்’’ என்றார். ’கூட்டணி ஆட்சி’ என ஆட்சியில் பங்கு என்றதோடு பழனிசாமியின் பெயரைக்கூட அமித்ஷா உச்சரிக்கவில்லை. ’’கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமிதான்’’ என அடிமைகள் வீராவேசம் காட்டினாலும் எஜமானர் அமித்ஷா, பழனிசாமி பெயரைக்கூட சொல்ல மறுக்கிறார். . ’கூட்டணிக்கு தலைமை’ என்ற பதவியிலேயே தடுமாறிக் கொண்டிருக்கும் பழனிசாமிதான் ’முதல்வர் பதவி’க்கு வரப் போகிறாரா? ’’இந்த அவமானம் உனக்கு தேவையா?’’ என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிக்கு பொருத்தமான கேரக்டர் பழனிசாமிதான்! அவமானங்களை தாங்கி கொள்வது ஆயக்கலைகளிலும் அடக்காத ஒன்றுதான் போல! இவ்வாறு விமர்சித்தார்.

 

Related Stories: