அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சு: ஓய்வூதியம் குறித்து முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

* 23 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா? 6ம் தேதி போராட்டம் வாபஸ் ஆகுமா?

சென்னை: ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் குறித்து முக்கிய அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 6ம் தேதி போராட்டம் வாபஸ் ஆகலாம் என்று கூறப்படுவதுடன், 23 ஆண்டு பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசில் சுமார் 9 லட்சம் பேர் அரசு ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 1.4.2003 அன்றைய தேதிக்கு முன்புவரை அரசு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதன்பிறகு பணியில் சேரும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இதற்கிடையே ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களையும் நடத்தினர். அப்போது அரசு ஊழியர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது.

ஆனால் தங்களது கோரிக்கை நிறைவேறவில்லை என்று கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டங்களை நடத்தின. இதனிடையே பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய ஓய்வூதிய திட்டங்களின் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, 194 சங்கங்களுடன் ஒன்பது கட்டங்களாக இந்த குழு ஆலோசனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மாதம் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அந்த குழு சமர்ப்பித்தது. முழு அறிக்கையை டிசம்பர் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். அவர்களுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 6ம்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் அறிவித்தன.

இது ஒருபுறம் நடந்து கொண்டு இருக்க, ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ககன்தீப்சிங் பேடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் கடந்த 30ம் தேதி (செவ்வாய்) சமர்ப்பித்தனர். இறுதி அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவு எடுத்து, அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழக அரசு நியமித்துள்ள குழு கொடுத்துள்ள இறுதி அறிக்கையில், ஒன்றிய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழைய ஓய்வூதியம் தொடர்பாக ஜாக்டோ-ஜியோ மற்றும் போட்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு நேற்று தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் அறையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் நடந்தது. பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வெளியே வந்த ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ அமைப்பினர் அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எங்களது கோரிக்கை ஏற்கப்பட்டதாக அறிவித்தனர்.

மேலும் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (இன்று) முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என்றும் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கு.வெங்கடேசன் கூறியதாவது: பழைய ஓய்வூதியம் தொடர்பாக நாளை (இன்று) முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என நம்புகிறோம். முதல்வரின் இன்றைய அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான பரிசாக இருக்கும் என்று நம்புகிறோம். மேலும், அரசு ஊழியர்களின் மற்ற கோரிக்கைகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட வேண்டும்” என்றார். போட்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது பிரதான கோரிக்கை. அதன் அடிப்படையில் இன்றைய பேச்சுவார்த்தையிலும் அந்த கோரிக்கையை தான் முன்வைத்திருக்கிறோம். எங்களது கோரிக்கை ஏற்கப்படுவதாகவும், இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் கூறினர்.

கூடுதலாக 23 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த பிரச்னைக்கு முதல்வர் ஓய்வூதியம் தொடர்பாக நாளை (இன்று) அறிவிப்பு செய்ய இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். மீதமுள்ள பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் விரிவாக பேசி இருக்கிறோம். அந்த கோரிக்கைகளை நிச்சயமாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்று உறுதி அளித்தனர். மேலும், தேர்தலுக்கு முன் பல்வேறு அமைச்சர்களுக்கும் இந்த கோரிக்கைகளை அனுப்பி உடனடியாக தீர்ப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஓய்வூதியம் கட்டாயம் உண்டு என்ற உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள். முதல்வர் அறிவிப்பதற்கு முன்பாக, என்னவிதமான ஓய்வூதியம் என்று அமைச்சர்கள் அறிவித்தால் நன்றாக இருக்காது என்பதால் முதல்வர் நாளை (இன்று) அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பதுபோல், அனைவரும் பலனடையும் வகையில், இன்னும் சொல்லப்போனால் 23 ஆண்டுகள் தீர்க்கப்படாத பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படும்விதமாக நாளை அறிவிப்பு செய்யப்படும் என்று அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.

அதேநேரம் 6ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக நாளை (இன்று) முதல்வர் அறிவிப்பை வெளியிட இருக்கிறார். அந்த அறிவிப்பை பார்த்துவிட்டுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். 23 ஆண்டுகள் காத்திருந்து விட்டோம், இன்னும் ஒருநாள் காத்திருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: