புதுடெல்லி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சீன ராணுவம் களமிறங்க உள்ளதாக பலுச் தலைவர் ஒருவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள இந்தியப் பகுதிகளில் சீன – பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை அமைப்பதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குவாடர் துறைமுகம் மற்றும் விமான நிலையம் வர்த்தகப் பயன்பாடு என்ற பெயரில் ராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதற்கிடையில், கடந்த 2025ம் ஆண்டு பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைப் பலுச் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டியிருந்தனர். கடந்த 79 ஆண்டுகளாகப் பாகிஸ்தானின் அடக்குமுறைக்கு ஆளாகி வரும் பலுசிஸ்தான் மக்கள், தங்களை விடுவிக்கக் கோரி நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், பலுச் தலைவர் மிர் யார் பலூச், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள அவசரக் கடிதத்தில், ‘சீனா தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக அடுத்த சில மாதங்களில் பலுசிஸ்தானில் ராணுவத்தை நிறுத்தத் தயாராகி வருகிறது.
இது மிகவும் ஆபத்தான கட்டமாகும்’ என்று எச்சரித்துள்ளார். மேலும் அவர், ‘பாகிஸ்தானின் அரசு ஆதரவு பெற்ற தீவிரவாதத்தை வேரோடு அழிக்கவும், பிராந்திய இறையாண்மையைக் காக்கவும் இந்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். பலுசிஸ்தானைத் தனி நாடாக அங்கீகரித்து, இந்தியாவில் எங்கள் தூதரகத்தைத் திறக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுதலாக விளங்கும் இந்த விவகாரத்தில், ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
