திண்டிவனம்: அன்புமணி ஆதரவு எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகளுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக ராமதாஸ் பேரன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தில் கடந்த 29ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் அவரது மகள் ஸ்ரீகாந்தியின் மகனும், பேரனுமான சுகந்தன், ‘மாமாவுக்கு பதவி வெறி கண்ணை மறைக்கிறது. அதனால்தான் பெற்ற தகப்பன் எதிரியாக தெரிகிறார்’ என அன்புமணி மீது கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி ஆதரவாளரான மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜேஷ், அன்புமணி பற்றி அவதூறு பேச்சுகளை இனி ஏதேனும் மேடைகளில் பேசினால் நிச்சயம் திண்டிவனம் வந்தால் சுகந்தனை முற்றுகையிடுவோம்’ என எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக, திண்டிவனத்தில் உள்ள ராமதாஸ் இல்லம் முன்பு நேற்று முன்தினம் ராமதாஸ் ஆதரவாளர்களுக்கும், அன்புமணி ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்பு கைகலப்பாக மாறியது.
அவர்களை போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும், பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, இருதரப்பினரும் காவல் நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்தனர். அதன்பேரில் இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அன்புமணி ஆதரவாளரான மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு ராமதாஸ் ஆதரவாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நேற்று திண்டிவனம் காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட அன்புமணி ஆதரவாளர்கள் குவிந்து, ராமதாஸின் மற்றொரு பேரன் முகுந்தனின் தூண்டுதலின்பேரில் தொடர்ந்து தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்து வருவதாக புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
