×

இசிஆர், ஓஎம்ஆர் மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் புத்தாண்டு கொண்டாட கடும் கட்டுப்பாடுகள்

செங்கல்பட்டு, டிச. 31: செங்கல்பட்டு மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாத கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், 564 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் எஸ்.பி. சாய் பிரணித் ெதரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி.சாய் பிரணித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று பிற்பகல் முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளாள இ.சி.ஆர்., ஒ.எம்.ஆர்., ஜி.எஸ்.டி மற்றும் மாவட்டத்தின் பலமுக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 30க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் மாவட்டத்தில் மிக முக்கிய இடங்கள், கோயில்கள், தேவாலயங்கள் போன்றவற்றிற்கு ரோந்து போலீசார் நியமித்து தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். இதில் 1 கூடுதல் போலீஸ் எஸ்.பி, 7 டி.எஸ்.பி, 25 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 530 போலீசார் என மொத்தம் 564 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இசிஆர், ஓஎம்ஆர் மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பீச் ரெசார்ட் உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் நடத்தக்கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தல் கூடாது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் நபர்கள் மதுபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது, மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகள் முறையே திருவிடந்தை மற்றும் எஸ்.எஸ்.என். கல்லூரி அருகில் வாகன தணிக்கை செய்யப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான உணவகம், தங்கும் விடுதிகளில் முறையான முன்பதிவு பெற்ற நபர்கள் மட்டுமே மாமல்லபுரம் பகுதிக்கு அனுமதிக்கப்படுவர்.

இளைஞர்கள் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பெண்களை கேலி மற்றும் கிண்டல் செய்வதை தவிர்க்க வேண்டும். மீறும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாலைகளில் புத்தாண்டு கொண்டாடும் விதமாக வாகன பந்தயம் மற்றும் சாகசத்தில் ஈடுபடக்கூடாது. மீறும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வாகனம் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். மேலும் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் திருவிடந்தை முதல் கடப்பாக்கம் வரையிலான கடற்கரை பகுதிகளில் கடலில் இறங்கி குளிப்பதும், படகில் கடலுக்குள் அழைத்து செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து படகுகள் பறிமுதல் செய்யப்படும்.
எவ்வித அசம்பாவிதமும் இன்றி கொண்டாட காவல் துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சர்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் தங்கள் பகுதிகளில் செயல்படும் பொழுதுபோக்கு தளங்கள் மற்றும் விடுதிகள் மேற்கூறிய விதிமுறைகளை மீறினால் அதுகுறித்தும், மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் வாகன சாகசங்களில் ஈடுபடுதல் போன்ற இளைஞர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி கண்காணிப்பில் இயங்கும் ஹலோ போலீஸ் எண் 7200102104 என்ற எண்ணுக்கு தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் வாயிலாக தகவல் தெரிவிக்கலாம். கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் காவல் கட்டுபாட்டு அறை 044-29540888, 044-29540555/777, தனிப்பிரிவு அலுவலகம் 7200102104 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

ரிசார்ட், ஓட்டல்களுக்கு எச்சரிக்கை
ஆங்கில புத்தாண்டு ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாமல்லபுரம் டிஎஸ்பி அறிவழகன் தலைமை தாங்கினார். சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், டிராபிக் இன்ஸ்பெக்டர் செல்வம், எஸ்ஐ பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஓட்டல் ரிசார்ட், பண்ணை வீடுகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், டிஎஸ்பி அறிவழகன் பேசுகையில், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் பண்ணை வீடுகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் நிதழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். மது அருந்திவிட்டு கடற்கரைக்கு சென்று கடலில் குளிக்க கூடாது.

கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் கொண்டு வந்தால் அனுமதிக்கக் கூடாது. மது அருந்தி விட்டு நீச்சல் குளங்களில் குளிக்கக் கூடாது. நீச்சல் குளத்தை தடுப்புகள் அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட விடுதி மேலாளர்கள் தங்களிடம் முன்பதிவு செய்த விருந்தினர்கள் முன்பதிவு செய்ததற்கான ரசீதை போலீஸ் சோதனை சாவடியில் காண்பிக்க முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அனைத்து, நிர்வாகங்களும் தற்காலிக ஓட்டுனர்களை போதிய அளவில் வைத்திருக்க வேண்டும். அறைக்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விடுதி உரிமையாளர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார். காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக ஓட்டல், ரிசார்ட் மற்றும் பண்ணை வீடுகளின் உரிமையாளர்கள், மேலாளர்கள் உறுதியளித்தனர்.

Tags : ECR ,OMR ,GST ,New Year ,Chengalpattu ,Chengalpattu district ,District Police S.P. ,Sai Praneeth ,Chengalpattu District Police S.P. ,
× RELATED புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக்...