ஏகாதசிலேயே “வைகுண்ட ஏகாதசி’’ மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம், வைணவ திருத்தலங்களில் “சொர்க்கவாசலுக்கென்று’’ தனியாக ஒரு பகுதி இருக்கும்.
அந்த பகுதி திறக்கப்பட்டு, அவ்வாலைய பெருமாள் அங்கு எழுந்தருளி, அவ்வழியாக சென்று சேவை சாதிப்பார். அதன் பின், பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக செல்வார்கள்.
இதனை “பரமபதவாசல்’’ என்றும் கூறுவர். வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறும் இந்த பரமபதவாசல் விழாவானது, திருவரங்கத்தில் (ரங்கம்) நடைபெறுவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. காரணம், 108-திவ்ய க்ஷேத்திரத்துலேயே முதன்மையானது திருவரங்கம்தான். உலகிலேயே மிக பெரிய கோயிலாக திருவரங்கம் பார்க்கப்படுகிறது, சுமார் 6,31,000 சதுர மீட்டர் (6,790 சதுர அடி) பரப்பளவும், 4கிமீ
(10,710 அடி) சுற்றளவும் கொண்டது. அதுமட்டுமா! சுவயம் வ்யக்த க்ஷேத்திரமாக அதாவது, சுயம்பாக, தானாக உருவான கோயில். இப்படி பல சிறப்புகளை கொண்ட திருவரங்கம் கோயிலில் நடைபெறும் “வைகுண்ட ஏகாதசி’’ விழாவானது மட்டும் சிறப்பில்லாது இருக்குமா என்ன! “வைகுண்ட ஏகாதசி அன்று பரமபதவாசலை மிதித்து கடந்து வந்தால், நேரடியாக சொர்க்கத்திற்கு செல்லலாம்’’ என்பது பெரியோர்களின் வாக்கு. அது மட்டும் தெரிந்திருந்தால் போதுமா? வைகுண்ட ஏகாதசி எப்படி உருவானது? ஏன் சிறப்புகளை பெற்றது போன்ற சுவையான திருமங்கையாழ்வாரின் கதையோடு தெரிந்து கொள்வோம்.
ராப்பத்தும் ரங்கநாதரும்
கார்த்திகை திருநாளன்று திருமங்கையாழ்வார் ஒரு முறை திருவரங்கத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு பள்ளி கொண்டிருக்கும் ரெங்கநாதரை உள்ளம் குளிர, கண்ணீர் பெருகி பெருமானை பிரார்த்திக்கிறார். கார்த்திகை திருநாள் அன்று, அழுது தொழுது பெருமானை விண்ணப்பம் செய்து, பாடி, பெருமானை மகிழ்விக்கிறார். இதில் பள்ளிக் கொண்ட பெருமான் குளிர்ந்து, “அப்பா… திருமங்கையாழ்வா… உன்னுடைய பாசுரங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிரியமாக இருக்கிறது. எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. உன்னுடைய ஆராதனையை மிகவும் விரும்பி ஏற்றுக் கொள்கிறேன். உனக்கு ஏதாவது வரம் தரவேண்டும் என்று நினைக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோகேள்’’ என்று பள்ளிக் கொண்ட பெருமாள் கேட்கிறார். அதற்கு உடனே திருமங்கையாழ்வார் கூறுகிறார்; “ஆமாம் சுவாமி. உங்களிடத்தில் ஒரு விண்ணப்பம் கேட்கவேண்டும் என்றுதான் நானும் திருவரங்கத்திற்கு வந்திருக்கின்றேன்’’ என்கிறார். “நீ கேட்டு நான் செய்யாமல் இருப்பேனா..? நீ என் மீது கொண்ட அளவற்ற அன்பும் – பாசமும் எனக்கு மட்டுமல்லாது இந்த உலகத்துக்கே தெரியுமல்லவா! கொள்ளை அடித்து நான் கோயில் கொண்டிருக்கும் இடத்தை கட்டினாய் அல்லாவா! வழிப்பறி செய்தேனும் பெருமானுக்கு திருப்பணி செய்தாக வேண்டுமென்கின்ற வைராக்கியத்தோடு வாழ்ந்தவர் நீ அல்லவா! ஆகையால், என்ன விண்ணப்பம் என்றுகேள்’’ என்கின்றார், பள்ளிக் கொண்ட பெருமாள், ரெங்கநாதர். “பெருமாளே.. இந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வார் அருளிச் செய்த, ஆயிரம் பாசுரங்களும் அமுதத்திலும் அமுதமானவை. அந்த ஆயிரம் பாசுரங்களையும் விண்ணப்பம் (இந்த இடத்தில் விண்ணப்பம் என்பதற்கான பொருள், கேட்பது) செய்ய வேண்டும் சுவாமி. வருடந்தோறும் நீங்கள் அதனை கேட்டு மகிழ வேண்டும் சுவாமி…’’ என்று திருமங்கையாழ்வார் கைகளை கூப்பி, கொஞ்சும் குரலிலே கேட்கிறார். அடேடே… என்ன ஒரு பெருந்தன்மை பாருங்கள், திருமங்கையாழ்வாருக்கு. தான் எழுதிய பாசுரங்களை தினமும் பெருமாள் கேட்கவேண்டும் என்று வரம் கேட்காமல், நம்மாழ்வார் அருளிய பாசுரங்களை பெருமாள் கேட்க வேண்டும் என்று வரம் கேட்கிறார். “பாசுரங்களை கேட்பதில் எனக்கு அலாதி பிரியமுண்டு. கேட்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அதனை கேட்பதற்கென்று ஒரு நாள் வேண்டுமல்லவா? அந்த நாள் எந்த நாள்? அதனையும் நீயே சொல்’’ என்கிறார், பெருமாள். பெருமாள் இப்படி ஒரு கேள்வியை நம்மிடத்தில் கேட்பார் என்று சற்றும் எதிர்பாராத நம்மாழ்வார், பாசுரங்களை பெருமாள் கேட்க சிறந்த நாள் ஒன்றை யோசிக்க ஆரம்பிக்கிறார். யோசித்து பகவானிடத்தில்; “சுவாமி.. மார்கழி மாதத்தில் ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை கணக்கீடு செய்து, நாள் ஒன்றுக்கு நூறு பாடல்கள் வீதம் பத்து நாட்களில் ஆயிரம் பாடல்களை நீர் கேட்டுவிடலாம். உமக்கும் சிரமம் இருக்காது. பாசுரம் சொல்பவருக்கும் சிரமம் இருக்காது’’ என்று சொன்னார். “ஹோ.. ரொம்ப நன்றாக இருக்கின்றதே!இந்த பாசுரம் நடைமுறைக்கு ஏதாவது பெயர் வைப்போம்’’ என்று பள்ளிக் கொண்டவன்கூற, “வைக்கலாமே… “ராப்பத்து’’ என்று பெயர் வைப்போம். ஆக, நூறுநூறாக பாசுரங்களாக கேட்டு மகிழவேண்டும் சுவாமி’’ என்று விண்ணப்பம் செய்கிறார், திருமங்கையாழ்வார். திருவரங்கநாதனும் அதனை ஏற்றுக் கொண்டு, “உன் விருப்பப்படியே செய்யக் கடவுவது’’ என்று வரம் தருகிறார். அப்படி திருமங்கையாழ்வாரால் தொடங்கப்பட்டதுதான் “ராப்பத்து’’.
பகல்பத்தும் நாதமுனியும்
இன்னொரு சம்பவமும் நிகழ்கிறது. நாதமுனிகளும் ரெங்கநாதரை வழிபாடு செய்கிறார். அந்த சமயத்தில், ராப்பத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. “சுவாமி.. இந்த “ராப்பத்து’’ கேட்டு விண்ணப்பம் செய்கிறாயே.. அதே போல், இன்னும் இரண்டாயிரம் பாசுரங்களுக்கு மேலே இருக்கின்றதே! நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் நீர் ஆயிரம் பாசுரங்கள் மட்டும்தானே கேட்கிராய். கிட்டத்தட்ட அனைத்து பாசுரங்களையும் கேட்பதற்கு, ஒரு கருணை காட்டக் கூடாதா?’’ என்று நாதமுனிகளும் பெருமாளிடத்தில் விண்ணப்பவிடுகிறார். அப்போது, நாதமுனிகளிடத்தில் எப்படி கேட்பது என்று கேட்கிறார்.
“ஏற்கனவே.. திருமங்கையாழ்வார் “ராப்பத்து’’ என்று பெயர் வைத்துவிட்டார். இரண்டாயிரம் பாசுரங்களை கேட்கவேண்டும் என்கின்ற எண்ணமும் ஆசையும் எனக்குள்ளும் இருக்கிறது. நான்காயிரத்தையும் நான் கேட்கவேண்டும் என்றுதான் விருப்பப்படுகிறேன் அதற்கு நீயே ஒரு வழியை சொல்’’ என்கிறார் பெருமாள். “ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்கள் திருமங்கையாழ்வார் சொன்னபடி பாசுரங்கள் நடைபெறட்டும். நாம் ஏகாதசிக்கு வரும் முதல் பத்து நாட்களை எடுத்துக் கொள்வோம். அதற்கு “பகல் பத்து’’ என்று பெயர் வைப்போம். “பகல்பத்து’’ – “ராப்பத்து’’ சமயங்களில் கிட்டத்தட்ட பாசுரங்கள் அனைத்தையும், விண்ணப்பம் செய்வதற்கு அருள்புரிய வேண்டும்’’ என்கிறார் நாதமுனி. சுவாமியும் அதை ஏற்றுக் கொள்கிறார். அப்படித்தான் ஆரம்பமாகிறது, “பகல்பத்து’’ – “ராப்பத்து’’.
அரங்கனின் அரையர் சேவை இந்த “பகல்பத்து’’ – “ராப்பத்து’’ இரண்டையும் சுவாமி விண்ணப்பம் செய்வதற்கு “அரையர் சேவை’’ என்று பெயர் உண்டு. இது ரங்கத்துக்கே உரிய ஒரு அற்புதமான சேவை என்றுதான் சொல்லவேண்டும். இந்த அரையர் சேவையை பார்க்காதவர்கள், அநேகமாக யாரும் இருக்க மாட்டார்கள். அரையர் சேவையை, அரையர்கள் என்று சொல்லக் கூடியவர்கள், வழிவழியாக வம்சாவளியாக வரக்கூடியவர்கள்தான் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்வார்கள். அரையர் சேவை செய்யக் கூடியவர்கள், சங்கு – சக்ர திருநாமம் தரித்த தலையில் பெரிய தொப்பி ஒன்றை அணிந்திருப்பார்கள். ஆடைஅணிகலன்கள் எல்லாம் அவர்களுக்கே உரித்தான சற்று வித்தியாசமாக காணப்படும். இவைகளை எல்லாம் அணிந்துக் கொண்டு, பாசுரங்களை முத்தமிழாகவும் பெருமாளுக்கு
விண்ணப்பம் செய்வார்கள். அதாவது… இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்று சொல்லக் கூடிய, பாசுரங்களை பாடி, நடித்து, ஆடி (நடனமாடி) பெருமாளுக்கு விண்ணப்பம் செய்வார்கள். இந்த மூவண்ணமாக விண்ணப்பம் செய்யக் கூடியதற்கு “அரையர் சேவை’’ என்று பெயர். பாசுரங்களை கைகளைக் கட்டிக் கொண்டு சொல்வதற்கு, “இயற் தமிழ்’’ என்று பொருள். இதையே பாடுவதாக இருந்தால், அது “இசைத் தமிழ்’’. இதுவே நடனமாடி நடித்துக் காட்டுவதற்கு, “நாடகத் தமிழ்’’. இவை மூன்றையும் சேர்த்து செய்பவர்களுக்கு, “அரையர்கள்’’ அதாவது “அரைதல்’’ என்பதன் பொருள் “விண்ணப்பித்தல்’’ என்பதாகும். இறைவனது திருச்செவிக்கு விண்ணப்பம் செய்வதுனாலே, இதற்கு “அரையர் சேவை’’ என்று பெயர்.
ஜி.ராகவேந்திரன்
