சேலம்: தமிழக வெற்றிக் கழகத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்த பின்னர், அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர், அக்கட்சியில் இருந்து விலகி தவெக.,வில் இணைந்து வருகின்றனர். அதிமுகவில் இருந்து பலரும் விலகி தவெகவில் இணைய உள்ளதாக அவ்வப்போது கூறி வந்தார். இந்நிலையில் நேற்று அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ மரியமுல் ஆசியா அதிமுகவில் இருந்து விலகி கோபி அருகே குள்ளம்பாளையத்தில் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
இதேபோல், சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான, சேலம் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பல்பாக்கி கிருஷ்ணன், செங்கோட்டையன் முன்னிலையில், தவெக.,வில் இணைந்தார். இந்த செய்தி வெளியான நிலையில், முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணனை, கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் புறநகர் மாவட்டத்தில், கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்ஜிஆர் மன்ற செயலாளர் பல்பாக்கி கிருஷ்ணன், அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
