* உற்பத்தி திறனில் கடந்தாண்டை விட 2 ஆயிரம் மெகாவாட் கூடுதல்
சென்னை: 5.08 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்து சூரிய சக்தியில் தமிழ்நாடு புதிய உச்சத்தை எட்டி இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நிலக்கரி, காற்றாலை, சூரிய சக்தி, நீர்மின், எரிவாயு, பயோகாஸ் போன்றவற்றில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் குறிப்பிட தகுந்த ஒன்றாக சோலார் பவர் என்றழைக்கப்படும் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பம். இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. சூரிய ஒளியை சேகரிக்கும் சோலார் பேனல்கள் மூலம் இந்த மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரத்தை நேரடியாக வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தலாம் அல்லது மின் கட்டமைப்புக்குள் அனுப்பி மற்றவர்களுக்கு விநியோகிக்கலாம். இந்த சோலார் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில், சூரிய சக்தி மின் உற்பத்தியில் தமிழகம் புதிய உச்சம் தொட்டுள்ளது. கடந்த டிச.23ம் தேதி தமிழக மின்வாரியத்தின் மின் கட்டமைப்புக்குள் 5.08 கோடி யூனிட் சூரிய சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் உச்சபட்சமாக 7,276 மெகாவாட் என்ற அளவையும் எட்டியது. இதற்கு முன்பு கடந்த ஜூலை மாதம் 4.85 கோடி யூனிட் உற்பத்தியும், ஆகஸ்ட் மாதம் 49.3 கோடி யூனிட் உற்பத்தியும் முதன்மையாக இந்த நிலையில் தற்போது அந்த ரெக்கார்டை உடைக்கும் வகையில் சூரிய சக்தியில் புதிய உச்சத்தை தமிழகம் எட்டியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தி சற்று குறைந்திருந்தது.
ஆனால், தற்போது வானம் தெளிவாகவும், வறண்ட வானிலை நிலவுவதாலும், சூரிய மின் உற்பத்தி மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த 23ம் தேதி மட்டும் தமிழகத்தின் மொத்த மின் தேவையில் 6 ஒரு பங்கு, அதாவது சுமார் 345.68 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சூரிய சக்தி பூர்த்தி செய்தது. அன்றைய தினம், நகரங்களிலும் மாவட்டங்களிலும் இதமான வானிலை நிலவியதால், மின் தேவை சுமார் 17,000 மெகாவாட் குறைவாகவே இருந்தது. மேலும் மறுநாள் அதாவது 24ம் தேதி சூரிய மின் உற்பத்தி சற்று குறைந்து 47.4 மில்லியன் ஆக இருந்தது. ஆனாலும், மழை பெய்ய வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதால், இனிவரும் நாட்களில் சூரிய மின் உற்பத்தி இன்னும் அதிகமாகும். மழைக்கான முன்னறிவிப்பு இல்லாத வரை, நல்ல சூரிய மின் உற்பத்தியை எதிர்பார்க்கலாம்.
உற்பத்தி செய்யப்படும் அனைத்து பசுமை மின்சாரத்தையும் மின் கட்டமைப்புக்குள் கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார். தமிழகத்தில் தற்போது 10,159.61 மெகாவாட் சூரிய மின் உற்பத்தித் திறன் உள்ளது. இதன் மூலம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, சூரிய மின் திறனில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தமிழகம் தனது சூரிய மின் உற்பத்தித் திறனில் கூடுதலாக 2,000 மெகாவாட் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
