சென்னையில் தெருக்கள், சாலைகளை தரமாக அமைக்க புதிய விதிமுறைகள்: விரைவில் அறிமுகமாகிறது

 

சென்னை: சென்னையில் அனைத்து சாலைகளும் ஒரே மாதிரியான தரத்தில் இருக்க புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதி முழுவதுக்கும் ஒரே மாதிரியான சாலை வடிவமைப்பு விதிமுறைகளை உருவாக்க முடியுமா? முடியும் என்கிறது சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா). நகரத்தின் அனைத்து தெருக்கள் மற்றும் சாலைகளுக்கும் ஒரே மாதிரியான வடிவமைப்பு விதிமுறைகளை வரைவு செய்துள்ளது. உடைந்த நடைபாதைகள், அடிக்கடி சாலைகளை தோண்டுவது, ஒரே மாதிரி இல்லாத நடைபாதை ஆகிய மூன்று பிரச்னைகளை சரிசெய்ய இந்த விதிமுறைகள் முக்கியமாக உதவும். இந்த வழிகாட்டுதல் 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 13 டவுன் பஞ்சாயத்துகள், 1 சிறப்பு தர டவுன் பஞ்சாயத்து மற்றும் 22 பஞ்சாயத்து யூனியன்களுக்கு பொருந்தும்.

இந்த விதிமுறைகள் சென்னை மாநகராட்சி,சென்னை மெட்ரோ ரயில், சென்னை குடிநீர் வடிகால் வாரியம், மாநில நெடுஞ்சாலை துறை, மற்ற பல துறைகள் என 15 வெவ்வேறு அமைப்புகளுக்கு பொருந்தும். இது குறித்து கும்டா உறுப்பினர் கூறியதாவது: இது 25 ஆண்டு விரிவான போக்குவரத்து திட்டத்தின் ஒரு பகுதி. குறுகிய காலத்தில், இரண்டு ஆண்டுகளுக்குள், உடனடியாக செய்யக்கூடிய சீரமைப்புகளை செய்ய விரும்புகிறோம். நடைபாதை வசதிகளில் குறைந்தபட்சம் ஓரளவு தரநிலையாக்கம் இருக்க வேண்டும். இதுகுறித்த முதல் வரைவு, பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படும். இறுதி வடிவம் பிப்ரவரி மாதத்திற்குள் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் இதை அரசாணையாக அறிவிக்க முயற்சிக்கிறோம். அதனால் இது கட்டாயமாக்கப்படும்.

350 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணம் கட்டுமானம் முதல் பராமரிப்பு வரை முழு திட்ட வாழ்க்கை சுழற்சியையும் உள்ளடக்கியது. முதன்மை சாலைகள், துணை முதன்மை சாலைகள், சேகரிப்பு சாலைகள், தெருக்களில் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது. அனைத்து சாலைகளிலும் ஒரு பக்கத்தில் குறைந்தது 2 மீட்டர் அகல நடைபாதை, பேருந்து நிறுத்தங்கள், வாகன நிறுத்துமிடம், குப்பை தொட்டிகள் போன்றவற்றுக்கு குறைந்தது 2.5 மீட்டர் இடம், குறைந்தது 1 மீட்டர் அகலமான மரங்கள் நடும் இடம், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் 2-3 மீட்டர் அகல சைக்கிள் பாதைகள் என பல்வேறு அம்சங்கள் திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து காவல்துறையும், கும்டாவிடம் குழி நிறைந்த சாலைகளை முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்ய கேட்டுள்ளது. மோசமான சாலை நிலைமை, நெரிசல் மற்றும் விபத்துகளை அதிகரிக்கிறது.

மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து காவல்துறை, மழைநீர் வடிகால் துறைகள் இடையே தினசரி ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்படும். இது விரைவான சீரமைப்புக்கு உதவும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் சென்னையில் அனைத்து சாலைகளும் ஒரே மாதிரியான தரத்தில் இருக்க புதிய விதிமுறைகள் வருகின்றன. இனி நடைபாதைகள் சீரான முறையில் அமையும். எல்லா துறைகளும் ஒரே விதியை பின்பற்றும். இவ்வாறு கும்டா உறுப்பினர் கூறினார்.

Related Stories: