* சாதி, மதம் பார்த்து பணம் வாங்கி பதவி வழங்குவதாக பரபரப்பு குற்றச்சாட்டு
மதுரை: தவெகவின் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளராக கல்லாணை உள்ளார். இவர், கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் பதவி வழங்குவதற்கு வட்டச் செயலாளருக்கு ரூ.5 லட்சம் முதல் பதவிக்கு ஏற்ப பணம் பெற்றுக் கொண்டு சாதி, மதம் பார்த்து பதவி வழங்கி வருவதாகவும், கட்சியில் உள்ள பெண்களை பாடி ஷேமிங் செய்யும் வகையில் கேலி செய்வதாகவும், கட்சி சார்பில் அச்சிடும் அனைத்து போஸ்டர்களிலும் தனது படம் பிரதானமாக இடம்பெற வேண்டுமென தொண்டர்களை மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டி, சொந்த கட்சியினரே மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விசாலாட்சிபுரம் காளாங்கரை பகுதியில்மதுரையில் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் பெண்கள் மற்றும் ஆண்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, ‘சாதி, மதம் பார்த்து பதவி வழங்கும் மாவட்டச் செயலாளரே, பெண்களை கேலி செய்யும் மாவட்டச் செயலாளரே, பணத்திற்கு பதவியை விற்பனை செய்யும் மாவட்டச் செயலாளரே…’ என வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவைச் சேர்ந்த பெண் தொண்டர்கள் கூறுகையில், ‘‘மாவட்டச் செயலாளர் கல்லாணை, பெண் தொண்டர்களை பாடி ஷேமிங் செய்து கேலி பண்ணுகிறார். பல லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு பதவியை கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்களுக்கு வழங்குகிறார். விஜய்க்காக உழைத்தவர்களுக்கு பதவி வழங்காமல் கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கிறார்.
கல்லாணை தனது பிறந்த நாளுக்காக பிரியாணி போட வேண்டும் என்று நிர்வாகிகளை கட்டாயப்படுத்துகிறார். மன்னவரே என தனக்குத்தானே போஸ்டர் அடித்து ஒட்டிக் கொள்கிறார். இதையெல்லாம் விஜய் கண்டு கொள்வதில்லை.
விஜய் ரசிகராக இருந்து பல ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு பதவி வழங்காமல் பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வழங்கப்படுகிறது. சாதி, மதம் பார்த்து கட்சியை நிர்வாகிகளுக்கு பதவி வழங்குகிறார். அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கவேண்டும்’’ என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினர்.
