புவனகிரி: புவனகிரியில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி இரட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமு (83). ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர். கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையறிந்த வீட்டிலிருந்த அவரது மனைவி சாவித்திரி (76), அதிர்ச்சி தாங்காமல் திடீரென உயிரிழந்தார்.
வயதான தம்பதியான இவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. மனமொத்த தம்பதியாக வாழ்ந்த இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தி நேற்று உடல்களை அடக்கம் செய்தனர். இதற்கிடையில் இறந்த இருவரின் கண்களும் தானமாக பெறப்பட்டு, புதுச்சேரியில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
