உன்னாவ்: துபாயில் கப்பலில் நடந்த யூடியூபரின் ஆடம்பர திருமணச் செலவு குறித்து அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அனுராக் திவேதி, கிரிக்கெட் பேண்டஸி செயலிகள் மூலம் பிரபலமானவர். கடந்த நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் தோழியான தமன்னாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் துபாயில் ‘குயின் எலிசபெத் 2’ சொகுசுக் கப்பலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக இந்தியாவிலிருந்து சுமார் 130 விருந்தினர்களை 5 தனி விமானங்களில் துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்குப் பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்தது முதல், 25க்கும் மேற்பட்ட சொகுசு அறைகள், உணவு, சுற்றுலா என அனைத்து செலவுகளையும் இவரே ஏற்றுள்ளார். பாலிவுட் நட்சத்திரங்களும் இதில் கலந்து கொண்டதால் இந்தத் திருமணம் பெரும் பேசும்பொருளானது. இந்நிலையில், பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இந்தத் திருமணத்திற்கான நிதி ஆதாரம் குறித்து அமலாக்கத்துறை தற்போது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அனுராக் திவேதி ஏற்கனவே நிதி முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள நிலையில், திருமணத்திற்குச் செலவு செய்யப்பட்ட பணம் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தின் மூலம் கிடைத்ததா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை வெள்ளையாக்க இந்தத் திருமணம் பயன்படுத்தப்பட்டதா என்பதை அறிய அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
