திருமலை: கள்ளக்காதலை எதிர்த்த கணவனை காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று விட்டு நாடகமாடிய மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் அசோக் (45), தனியார் கல்லூரி ஊழியர். இவரது மனைவி பூர்ணிமா (36). இவர்களுக்கு 11 வயதில் மகன் உள்ளார். இவர்கள், மெடிபள்ளியில் உள்ள பிருந்தாவன் காலனியில் வசித்து வந்தனர். பூர்ணிமா, வீட்டிலேயே குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு பூர்ணிமாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதையறிந்த அசோக், மனைவியை கண்டித்துள்ளார். கண்டுகொள்ளவில்லையாம்.
தங்களது கள்ளக்காதலுக்கு கணவர் தொடர்ந்து இடையூறாக இருப்பதாக கருதிய பூர்ணிமா, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதை, தனது கள்ளக்காதலன் மகேஷிடம் தெரிவித்தார். இதற்கு சம்மதம் தெரிவித்த மகேஷ், அவரது நண்பர் சாயுடன் சேர்ந்து அசோக்கை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 11ம்தேதி மாலை அசோக் வேலை முடிந்து வீடு திரும்பினார். அதற்கு முன்னதாக மகேஷ், சாய் ஆகியோர் வீட்டிற்குள் வந்து, ஒரு அறையில் மறைந்திருந்தனர். பூர்ணிமா, மகனை மற்றொரு அறையில் சாப்பிட வைத்து அங்கேயே தூங்க வைத்துவிட்டு அந்த அறையை பூட்டிவிட்டாராம். பின்னர் அசோக், சாப்பிட்டுவிட்டு படுக்கை அறையில் தூங்கியுள்ளார்.
நள்ளிரவு நேரத்தில் அயர்ந்து தூங்கிய அசோக்கை பூர்ணிமா, கள்ளக்காதலன் மகேஷ், சாய் ஆகியோர் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் மகேஷ், சாய் தப்பி ஓடிவிட்டனர். மறுநாள் காலையில் பூர்ணிமா கதறி அழுதுள்ளார். அப்ேபாது வீட்டின் அருகே வசிப்பவர்கள் வந்து கேட்டுள்ளனர். அதற்கு அவர், தனது கணவர், மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அசோக்கின் பெற்றோர், மற்றும் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு முன்னதாகவே பூர்ணிமா நடவடிக்கை சரியில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அசோக்கின் பெற்றோர், போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அசோக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அசோக் மாரடைப்பால் இறக்கவில்லை. கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதனடிப்படையில் பூர்ணிமாவை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, கள்ளக்காதலன் மகேஷ் மற்றும் அவரது நண்பர் சாய் உதவியுடன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பூர்ணிமா, மகேஷ் மற்றும் சாய் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தந்தை கொலையான நிலையில் தாய் சிறைக்கு சென்றதால் அவர்களின் 11 வயது மகன் பெற்றோர் இல்லாமல் தந்தையின் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
