ஈரோடு, டிச. 24: கடும் பனிப்பொழிவால் வரத்து குறைந்த நிலையில் ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ.70க்கு விற்பனையானது. ஈரோடு வஉசி மைதானத்தில் செயல்படும் காய்கறி சந்தைக்கு தாளவாடி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம் மற்றும் கர்நாடகா, ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வரும். தினசரி 8 முதல் 10 ஆயிரம் பெட்டி தக்காளி (ஒரு பெட்டி 30 கிலோ) விற்பனைக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக, தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மார்க்கெட்டிற்கு நேற்று 4 ஆயிரம் பெட்டி தக்காளி மட்டுமே வரத்தானது. இதனால், தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. இது குறித்து தக்காளி வியாபாரிகள் கூறியதாவது: கடும் பனிபொழிவு காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த அதிக மழை காரணமாகவும் பெரும்பாலான இடங்களில் செடிகள் அழுகி விட்டன. இதனாலும் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஈரோடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையாகி வந்த தக்காளி, தற்போது ரூ.70க்கு விற்பனையாகிறது. எதிர்வரும் நாட்களிலும் தக்காளி விலை மேலும் உயருவதற்கான வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
