சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு

 

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, ப.சிதம்பரம் இன்று காலை திடீரென சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள், தேர்தல் பணிகள், பிரசாரம், தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தைக்காக, தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் என 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது. இந்த குழுவினர் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது.

அப்போது சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். கடந்த முறை சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ்க்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் கடந்த முறையைவிட சற்று அதிகமான தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக திமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் திடீரென சந்தித்து பேசினர். முதல்வர் மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம் மரியாதை நிமித்ததாக சந்தித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories: