செவிலியர்கள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை -அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: செவிலியர்கள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கிண்டி எம்.ஜி.ஆர். பல்கலை.யில் போராட்டக் குழுவினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; காலிப் பணியிடங்கள் உருவானால் 2 ஆண்டு பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பொங்கலுக்கு முன் பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றிய 724 செவிலியர்களுக்கு தொகுதிப்பூதிய பணியிடங்கள் உருவாக்கி தரப்படும். 750 செவிலியர்களுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கித் தரப்படும்

அரசின் சார்பில் பரிசீலிக்கப்பட்டு செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 3,614 ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 1,200 செவிலியர்கள் 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பணி அமர்த்தல். 169 பேருக்கு உடனடி நிரந்தர பணியாணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

Related Stories: