திருச்சி, டிச.22: திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் சத்திரம் பஸ் நிலையத்திலுள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி, ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பணிகள் குறித்து டிச.19 அன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மாதிரியை வைத்து பிஎல்ஐ-2 அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பெயர் சேர்த்தல், நீக்கல் சம்பந்தமான தீவிரப்பணிகளை மேற்கொள்தல் மற்றும் திமுக-வின் ஆக்க பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், பீகாரில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து தமிழ்நாடு, மேற்கு வங்காளம் என ஆணவமாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் கூற்றை பொய்யாக்கி தமிழ்நாட்டில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியயை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைய பாடுபடுவோம். திருவெறும்பூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளும், அடிப்படை தேவைகளுமான திருவெறும்பூர் பஸ் நிலையம் ஒப்புதல் வழங்கியும், மணப்பாறை தொகுதியில், கலைஞர் விளையாட்டு அரகங்கம் அமைந்திட நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டில் கலைஞர் பல்கலைக் கழகம் அமைவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், தீர்மானத்தை கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வரும் ஒன்றிய அரசின் கைக்கூலியாக செயல்படும் ஆர்.எஸ்.எஸ்-ன் கவர்னர் ஆர்.என்.ரவியை வன்மையாக கண்டிக்கின்றது.
ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து தனி ஒரு ஆளாக போராடி ஒன்றிய அரசிற்கு கல்வி கொள்கையிலுள்ள குறைகள் அனைத்தையும் தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக மதயானை என்னும் புத்தகத்தை எழுதியது மட்டுமின்றி, ஒரு மாநில அமைச்சராக இருந்து கொண்டே இந்தியாவில் முதல்முறையாக வேலை பளுவிற்கிடையே முனைவர் பட்டமும் பெற்று பெருமை சேர்த்து, முதலமைச்சர் வாயால் பாராட்டும் பெற்ற அமைச்சர் அன்பில் மகேஸ்-க்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரில் செயல்பட்டு வந்த 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியுள்ள ஒன்றிய பா.ஜ. அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது. இத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுகவுக்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாநகர திமுக செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வன்னை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா தொகுதி பார்வையாளர்கள் மணிராஜ், கதிரவன், பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பல்வேறு அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி சேர்மன்கள் கலந்து கொண்டனர்.
