×

பாலியல் துன்புறுத்தலை தடுக்க நிறுவனங்களில் உள்ளக குழு அமைக்க உத்தரவு

கோவை, டிச.20: பணிபுரியும் நிறுவனங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தலை தடுக்க உள்ளக குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர் கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013ம் ஆண்டு மத்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அதன் கிளை நிறுவனங்கள் என அனைத்திலும் தனித்தனியான உள்ளக குழுக்கள் ஏற்படுத்த வேண்டும். இது 5 உறுப்பினர்களை கொண்டு இருக்க வேண்டும். உள்ளக குழு தலைவராக பெண் அலுவலர் நியமிக்க வேண்டுமெனவும், மேலும் குழுவில் 50 சதவீத உறுப்பினர்கள் பெண்களாகவும் மற்றும் ஒரு உறுப்பினர் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் பற்றி நன்கு அறிந்தவராகவோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவராகவோ இருத்தல் வேண்டும்.

இதுவரை உள்ளக குழு அமைக்காத நிறுவனங்கள் உடனடியாக உள்ளக குழு அமைத்து தகவல்களை மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். உள்ளக குழு அமைக்கப்படாத நிறுவனங்களின் மீது பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டம் 2013ன் கீழ் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். உள்ளக குழு அமைத்த விவரத்தை SHE BOX PORTAL- (https://shebox.wcd.gov.in/) மற்றும் TN POSH – (https://www.tnswd-poshicc.tn.gov.in/ords/r/wsswdicc/swicc/home) ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யவும் மற்றும் உள்ளக குழு அமைத்துள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதிக்குள் ஆண்டு அறிக்கையை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Coimbatore ,District ,Collector ,Pawan Kumar ,
× RELATED சூலூரில் மாணவியிடம் பேசியதால்...