×

கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண் அடித்து கொலை: அடகு கடை உரிமையாளர் சரண்; நண்பர்களுக்கு வலை

கோவை: கோவையில் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண்ணை அடித்துக் கொலை செய்த நகை அடகு கடை உரிமையாளர் போலீசில் சரண் அடைந்தார். கோவை ரத்தினபுரி ஜி.பி.எம். நகரை சேர்ந்தவர் ராஜாராம்(53). இவர் சின்ன மேட்டுப்பாளையத்தில் நகை அடகு கடை மற்றும் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி ராஜாராம் அடகு கடையில் இருந்தபோது பெண் ஒருவர் வந்து மோதிரத்தை அடகு வைத்து ரூ.30 ஆயிரம் பெற்றார். அப்போது தனது பெயர் சுமதி என்றும், சின்ன மேட்டுப்பாளையத்தில் ஜவுளி வியாபாரம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மறுநாள் மீண்டும் வந்து ஜவுளி தொழிலை விரிவுபடுத்த பணம் தேவை எனக் கூறி வளையலை அடகு வைத்து ரூ.32 ஆயிரம் பெற்று சென்றார். மீண்டும் கடந்த 12ம் தேதி வந்து நகைகளை கொடுத்து ரூ.75 ஆயிரம் பெற்று வேகமாக சென்றுவிட்டார்.  ஒரு வாரத்திற்குள் ரூ.1.37 லட்சம் பெற்றுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ராஜாராம் அவர் கொடுத்த நகைகளை சோதனை செய்தபோது அவை கவரிங் நகைகள் என தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த ராஜாராம் அந்த பெண் கொடுத்த முகவரிக்கு சென்றபோது போலி முகவரி என தெரிந்தது. இதையடுத்து ராஜாராம் நண்பர்கள் மூலம் அவரை தொடர்ந்து தேடி வந்தார். இந்நிலையில், ராஜாராம் தேடுவதை அறியாத அந்த பெண் கடந்த 17ம் தேதி மீண்டும் கவரிங் நகையை அடகு வைக்க வந்தார். அவரை பிடித்து வைத்த ராஜாராம் நண்பரான மகேந்திரன் மற்றும் ஒருவருக்கு போன் செய்து வரவழைத்து அந்த பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்தனர். தொடர்ந்து அவரை அத்திப்பாளையம் ரோடு தண்ணீர் டேங்க் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கூட்டி சென்று பிவிசி பைப், கட்டையால் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் அங்கேயே சரிந்து உயிரிழந்தார்.  பயந்து போன 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
எப்படியும் போலீஸ் பிடித்து விடுவார்கள் என நினைத்த நகை அடகு கடை உரிமையாளர் ராஜாராம் நேற்று முன்தினம் கோவை சரவணம்பட்டி போலீசில் சரண் அடைந்தார். அங்கு அவர் பெண் ஒருவரை அடித்துக்கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு சென்று பெண் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்தனர். இதில், கொலை செய்யப்பட்ட பெண் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவை சேர்ந்த பெரியசாமி மனைவி சுதா (39) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஜவுளி வியாபாரி என பொய் முகவரியை கொடுத்து கவரிங் நகைகளை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான மகேந்திரன் உட்பட சிலரை தேடி வருகின்றனர்.
Tags : Saran ,Goa ,Govai Ratnapuri G. B. M. Rajaram ,
× RELATED ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு...