கொடநாடு கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத 3 பேருக்கு பிடிவாரண்ட்

ஊட்டி: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாத 3 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஊட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி இரவு காவலாளியை கொலை செய்த கும்பல் பங்களாவில் இருந்த சில ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக முக்கிய நபரான சயான் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞர் கனகராஜ், சிபிசிஐடி., ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல் ஜித்தின்ஜாய் ஆஜராகினார். வழக்கு விசாரணையின் போது நீதிபதி முரளிதரன் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், இவ்வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ள சதீஷன், தீபு மற்றும் சதீஷ்சாமி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார். இவ்வழக்கில் வெளிநாடுகளில் விசாரணை மேற்கொள்ளவும், பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ளவும் ஒன்றிய அரசு அனுமதிக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜனவரி 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

Related Stories: