சென்னை: சட்டசபை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் பெறப்படும் விருப்ப மனு விநியோகம் இன்று நிறைவடைய இருந்த நிலையில், வரும் 27ம் தேதி வரை நீட்டித்து அன்புமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 14ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பெறப்பட்டு வருகிறது. நேற்று காஞ்சிபுரம் மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் சோழிங்கநல்லூர் இரா.மோகன சுந்தரம் பாமக தலைவர் அன்புமணி போட்டியிட வேண்டி ரூ.10 ஆயிரம் கட்டி விருப்ப மனு செய்தார். அதேபோன்று செய்யாறில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு செய்தார்.
மேலும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு தனக்காகவும் விருப்ப மனு தாக்கல் செய்தார். பாமகவில் விருப்ப மனு அளிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைய இருந்தது. இந்த நிலையில், தாங்களும் மனு தாக்கல் செய்ய வசதியாக காலக்கெடுவை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வேண்டும் என ஏராளமானோர் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்று பாமக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வழங்குவதற்கான காலக்கெடு டிசம்பர் 27ம் தேதி (சனிக்கிழமை) வரை நீட்டிக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
