டெல்லி: நாட்டுக்காக பாடுபட்ட காந்தி உள்ளிட்ட தலைவர்களை ஒன்றிய பாஜக அரசு மதிப்பதில்லை என மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுகிறது. மக்களுக்கு எதிரான மசோதாக்களை ஒன்றிய அரசு அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது. எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் இல்லை. எந்தவித விவாதமும் இன்றி ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. மாநிலங்களை தொடர்ந்து பலவீனப்படுத்தும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபடுகிறது.
நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனைகள் பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டது. காப்பீட்டுத்துறையில் 100 சதவீத நேரடி அந்திய முதலீட்டை அனுமதித்துவிட்டனர். நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்கள் யாரையும் ஒன்றிய பாஜக அரசுக்கு பிடிக்கவில்லை. 100 நாள் வேலை திட்டத்தின் பெயரையே மாற்றி விட்டனர். விடுதலைக்காக போராடிய தலைவர்கள் மீது ஒன்றிய பாஜக அரசுக்கு வெறுப்புதான் உள்ளது. நாடாளுமன்றத்தின் முகப்பில் உள்ள காந்தி, அம்பேத்கர் சிலைகளை ஒதுக்குப்புறத்தில் கொண்டு போய் வைத்துவிட்டனர்.
மாநிலங்களின் மீது சுமையை ஏற்றும் வகையில் ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை இன்று காலை தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளாகவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்திற்கான மாற்று மசோதாவை கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தார். தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை அவமதிக்கிறது ஒன்றிய பாஜக அரசு என்றும் கூறினார்.
