திருத்தணி: திருத்தணி அருகே பள்ளியில் சுவர் விழுந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே. பேட்டை தாலுகா, கொண்டாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் மோகித் என்ற மாணவன் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற போது பள்ளிக் கட்டடத்தின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் மாணவர் படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவன் மோஹித்தை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவனின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் பள்ளி கட்டடத்தின் பாதுகாப்பற்ற நிலை மற்றும் ஆசிரியர்களின் அலட்சியமே மாணவனின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டினர். மேலும், மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மாட்டோம் என கூறி காவல் துறையினருடன் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், காவல் துறையினர் தலைமை ஆசிரியர் தியாகராஜன், வட்டாரக் கல்வி அலுவலர் அமுதா, மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
