×

கடலூரில் பயங்கரம் வாலிபர் கழுத்தறுத்து படுகொலை காவல் நிலையத்தில் பெண் சரண் எஸ்பி நேரில் விசாரணை

கடலூர், டிச. 11: கடலூரில் திருமணமாகாத வாலிபர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கடலூர் பாதிரிக்குப்பம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பிரசாத் (40). இவர் தற்போது அதே ஊரில் சுந்தரமூர்த்தி நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். நீதிமன்றத்தில் பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்ட நிலையில், பிரசாத்தும் அவரது தாயார் ராமதிலகம் (70) மட்டும் வசித்து வந்துள்ளனர். அவரது மூத்த சகோதரி சூர்யாவுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். பிரசாத்துக்கு திருமணம் ஆகாத நிலையில் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை பிரசாத், கழுத்து அறுபட்ட நிலையில் ஓடி வந்து தனது தாயாரிடம் துண்டு கேட்டுள்ளார். துண்டை கழுத்தில் ரத்தம் வராத வகையில் சுற்றிக்கொண்டிருந்த நிலையில், மயங்கி விழுந்தார்.
இதை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்த, அவரது தாயார் ராமதிலகம் அழுது கூச்சல் போடவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, பிரசாத் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரணடைந்த பெண் பரபரப்பு வாக்குமூலம்
காவல் நிலையத்தில் சரணடைந்த கவிப்பிரியாவிடம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கவிப்பிரியா திருப்பாதிரிப்புலியூர் அகில் நாயுடு தெருவில் வசித்து வருகிறார். இவர் பிரசாத் வீட்டின் அருகே வாடகைக்கு குடியிருக்கும் தனது தந்தை வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில், பிரசாத் கவிப்பிரியாவின் தங்கைக்கு கடந்த மூன்று நாட்களாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கவிப்பிரியாவிடம் தெரிவித்து கதறி அழுது உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவிப்பிரியா நேற்று மதியம் பிரசாத்திடம் கேட்டபோது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்து பிரசாத் கழுத்தை கத்தியால் அறுத்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அவரது கணவர் முத்து(35) தலைமறைவாகிவிட்டார். அவருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என போலீசார் சந்தேகிக்கின்றனர். முத்து, திருப்பாதிரிப்புலியூர் அகில் நாயுடு தெருவில் பால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவர் மீது கஞ்சா உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கவிப்பிரியாவின் தந்தை சுப்பிரமணி வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பி தமிழ் இனியன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் கூப்பர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஓட விடப்பட்டது. கொலை நடந்த இடத்தில் இருந்து பக்கத்து வீட்டிற்கு ஓடிச் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பிரசாத்துக்கு பக்கத்தில் வீட்டில் வசித்து வந்தவர்களுடன் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. இதன் காரணமாக கொலை சம்பவம் நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பக்கத்து வீட்டின் கதவு திறந்து கிடந்த நிலையில், அங்கு யாரும் இல்லை. அவர்கள் தலைமறைவானார்களா? என போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதற்கிடையே கொலை சம்பவம் தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் பிரசாத் வீட்டிற்கு பக்கத்தில் வாடகை வீட்டில் வசித்த கவிப்பிரியா(30) என்பவர் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Cuddalore ,Prasad ,Kurinji Nagar, Pathirikuppam, Cuddalore ,Sundaramurthy… ,
× RELATED சமுதாய சீர்திருத்த சிந்தனைகளின்படி...