நெல்லை: நெல்லை தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில் கடந்த மாதம் 18ம்தேதி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி 2 லட்சத்து 52 ஆயிரத்து 400 ரூபாயை கைப்பற்றினர். அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் மர்ம நபர் அலுவலகத்திற்குள் நுழைந்து பணத்தை வைத்து சென்றதற்கான சிசிடிவி ஆதாரம் சிக்கியதையடுத்து, தூத்துக்குடி தீயணைப்பு வீரர் ஆனந்த் மற்றும் அவரது உறவினர் முத்துசுடலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், துணை இயக்குநர் அலுவலகத்தில் நள்ளிரவில் பணத்தை வைத்த மேலப்பாளையம், சிவராஜபுரம், அண்ணாநகர், 2வது தெருவைச் சேர்ந்த விஜய் என்வர் மும்பையில் கைதானார். அவர் ரூ.40 ஆயிரத்தை கூலியாக பெற்று பணத்தை வைத்ததாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் நெல்லை டவுன் தீயணைப்பு நிலைய வீரர் பாளை. விஎம் சத்திரத்தைச் சேர்ந்த மூர்த்தி, சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் முருகேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் விஜய் தீயணைப்பு அலுவலகத்தில் பணத்தை வைக்க தீயணைப்பு வீரர் முருகேஷ் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
