ஈரோடு: அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என்று பேசிய ஆளுநரின் திமிரை அடக்குவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவையில் செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்தார். தொடர்ந்து, ‘தமிழ்நாடு ரைசிங்’ முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.
இதில் ரூ.43,844 கோடி முதலீட்டில் 1,00,709 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்த விழாவை முடிந்து கொண்டு, நேற்று முன்தினம் இரவு ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்கினார். நேற்று காலை ஈரோடு சோலாரில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, ரூ.235 கோடியே 73 லட்சம் செலவிலான 790 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், ரூ.91 கோடியே 09 லட்சம் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சார்பில் 1,84,491 பயனாளிகளுக்கு ரூ.278 கோடியே 62 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இன்றைய நவீன தமிழ்நாட்டின் வரலாற்றுக்கு அடித்தளமான தந்தை பெரியாரை தந்த இந்த ஈரோட்டுக்கு, திராவிட இயக்கத்தின் முதன்மை தொண்டனான நான் பெருமையோடு இங்கே வந்திருக்கிறேன். ஈரோட்டு பூகம்பம் தந்தை பெரியார் இல்லையென்றால், திராவிட இயக்கம் இல்லை; பேரறிஞர் அண்ணா இல்லை; முத்தமிழறிஞர் கலைஞர் இல்லை; ஏன், தமிழ்நாட்டிற்கு இந்தளவுக்கு வளர்ச்சியும் இருந்திருக்காது.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுக்கின்ற குடைச்சல் போதாது என்று தமிழ்நாட்டின் வளர்ச்சியை நிரந்தரமாக கெடுக்க வேண்டும் என்றே ஒருவரை ஆளுநராக நியமித்திருக்கிறார்கள். அவர் சமீபத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு சேவையாற்ற அவர் வந்திருப்பதாக சொன்னதை கேட்டதுமே, சிரிப்புதான் வந்தது. தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்னைகள் இருக்கிறதாம். தீவிரவாத போக்கு நிலவுதாம். தமிழ்மொழி வளர்ச்சிக்காக இங்கே எதுவும் நடக்கவில்லையாம். எல்லோரும் ஆங்கிலம் படிக்கிறார்களாம். இப்படியெல்லாம் அவதூறு, ஆற்றாமை கலந்து புலம்பியிருக்கிறார். அந்த ஆளுநர். ஒன்றிய பா.ஜ ஆட்சியில்தான் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்து, சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் பலியானார்கள். ஒன்றிய பா.ஜ ஆட்சியில்தான் டெல்லி செங்கோட்டை அருகில் குண்டுவெடிப்பு நடந்தது. அங்கே மக்கள் பல பேர் பலியானார்கள்.
பா.ஜ. ஆட்சியில்தான் மணிப்பூர் இன்றும் பற்றி எரிகிறது. தீவிரவாத தாக்குதல்களில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத பா.ஜ ஆட்சியை புகழ்ந்து பேசியிருக்கிறார்
இந்த ஆளுநர். அமைதி பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார். அவருடைய திமிரை அடக்கவேண்டும். இக்கட்டான சூழல்களில் எல்லாம், தன்னுடைய தேசப்பற்றை காட்டி, நம்முடைய படை வீரர்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்குவது நம்முடைய தமிழ்நாடுதான். அப்படிப்பட்ட தமிழர்களை தேச விரோதிகளாக சித்தரிக்கின்ற ஆளுநரின் பேச்சு என்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பா.ஜவுக்கு வாக்களிக்காதவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்பதுபோல் பேசுகிறார். அவர் வகிக்கின்ற அரசியல் சாசன பொறுப்புக்கு துளியும் பொருத்தமற்ற, தகுதியற்ற தரக்குறைவான பேச்சு இது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
உங்களுக்கு எங்கே எரிகிறது?
‘எங்கள் பிள்ளைகள் உலக வாய்ப்புகளுக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். அதில், உங்களுக்கு என்ன பிரச்னை? உங்களுக்கு எங்கே எரிகிறது? இன்னும் டபுள் மடங்கு ஆர்வமாக நாங்கள் ஆங்கிலம் படிக்க தயாராக இருக்கிறோம். இந்தியா முழுவதும் இந்தி பேசாத மாநில மொழிகள் இன்றைக்கு உயிர்ப்புடன் இருக்கும் என்றால், அதற்கு காரணமே தமிழ்நாடுதான். உயிரை கொடுத்து மொழிப்போரில் ஈடுபட்டதுதான். தாய்மொழி பற்று பற்றி தமிழ்நாட்டிற்கு நீங்கள் வகுப்பெடுக்க வேண்டாம். அந்த பாடத்தில் நாங்கள் பி.எச்.டி. பட்டம் வாங்கியவர்கள்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
குடியரசு தலைவர் மீது பழி போடும் ஆளுநர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலைஞர் பேரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்காக மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைத்தால், அனுமதி கொடுக்காமல், 3 மாதம் கிடப்பில் வைத்து விட்டு, குடியரசு தலைவருக்கு அனுப்பினார். நான் கேட்கிறேன்… குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கின்ற அளவுக்கு, அதில் என்ன அரசியலமைப்பு சட்ட பிரச்னை இருக்கிறது? அவர் கிடப்பில் போட்டதை மறைக்க, குடியரசு தலைவர் மேல் பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறார். “கலைஞர்” பேர் வைக்க கூடாது என்று மாணவர்களின் நலனில் விளையாடுவது என்ன நியாயம்? மக்களாட்சியை மதித்து, இதற்கான உரிய அனுமதியை விரைவில் கொடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறேன். இல்லையென்றால், தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவரையே நேரில் சந்தித்து கோரிக்கை வைப்பார்கள். விரைவில் நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. அந்த நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள்.
‘தமிழ்நாட்டுக்கு ஒன் பர்சென்ட் நிதி’
‘நேற்று, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சோஷியல் மீடியாவில் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். 2024-25-ஆம் ஆண்டில், புதிய வழித்தடத்துக்கு ரயில்வே துறையால், ரூ.31 ஆயிரத்து 458 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் நம்முடைய தெற்கு ரயில்வேக்கு வெறும் ரூ.301 கோடிதான் ஒதுக்கியிருந்தார்கள். அதாவது, ஒரே ஒரு பர்செண்ட்தான். ஒவ்வொரு முறையும் பிரதமரை நான் சந்திக்கும்போது, மறக்காமல் நான் வைக்கின்ற முக்கியமான கோரிக்கை – தமிழ்நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்ற புதிய ரயில் திட்டங்களை நிறைவேற்றவேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கு அவர்கள் எடுத்திருக்கின்ற நடவடிக்கை என்ன? இந்த, ‘ஒன் பர்சென்ட்’ நிதி ஒதுக்கீடுதான். இதற்கு என்ன அர்த்தம்? வரி வசூலிக்க மட்டும் தமிழ்நாடு தேவை. ஆனால், நிதி ஒதுக்கீட்டில் பட்டை நாமத்தை போடுகிறது பாஜவின் ஆட்சி. இதிலிருந்து பா.ஜ. நமக்கு சொல்லாமல் சொல்லுகின்ற மெசேஜ், அரசியல் லாபங்களுக்காக பொதுமக்களை பழிவாங்கும் இந்த அற்ப அரசியல்தான் தமிழ்நாட்டில் பா.ஜவுக்கு தொடர் தோல்வியை அளித்துக்கொண்டிருக்கிறது’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
