சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்; கடந்த 2 நாளில் 2.20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்: உடனடி முன்பதிவு எண்ணிக்கையை குறைத்தும் பலன் இல்லை

திருவனந்தபுரம்: இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்து இன்றுடன் 11 நாள் ஆகிறது. முந்தைய வருடங்களை விட இந்த மண்டல காலத்தில் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்களும், முந்தைய தேதிகளில் முன்பதிவு செய்தவர்களும், அடுத்த வாரம் மற்றும் அடுத்த மாதத்திற்கு முன்பதிவு செய்தவர்களும் தரிசனத்திற்கு வந்தனர். இவர்கள் அனைவரும் வேறு வழியின்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் 1.17 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து நேற்று உடனடி முன்பதிவு எண்ணிக்கை மீண்டும் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. ஆனால் இதன் மூலம் எந்த பலனும் ஏற்படவில்லை. நேற்று காலை முதலே பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்றும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர். கடந்த 2 நாளில் மட்டும் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 2.20 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து இன்றும் உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

பாயசத்துடன் அறுசுவை விருந்து: சபரிமலை வரும் பக்தர்களுக்கு தினமும் மூன்று வேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சன்னிதானத்தில் மட்டுமல்லாமல் பம்பை, நிலக்கல், பந்தளம் ஆகிய இடங்களிலும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சன்னிதானத்தில் காலையில் உப்புமா, இட்லி, சாம்பார், மதியம் புலாவ், சாம்பார், இரவில் கஞ்சி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சன்னிதானத்தில் மதியம் பக்தர்களுக்கு அப்பளம், பாயசத்துடன் அறுசுவை விருந்து வழங்க தீர்மானித்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர் ஜெயகுமார் கூறினார். விரைவில் பக்தர்களுக்கு இந்த அறுசுவை விருந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதி
சபரிமலையில் கடந்த சில தினங்களாக செல்போன் சிக்னல் கிடைக்காமல் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எந்த செல்போன் நிறுவனங்களின் சிக்னல்களும் கிடைப்பதில்லை. இதனால் சபரிமலை வரும் பக்தர்கள் தங்களது உறவினர் உள்பட யாரையும் உடனடியாக தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்தது 10 தடவைக்கு மேல் முயற்சித்தால் மட்டுமே இணைப்பு கிடைக்கிறது. இதன் காரணமாக குழுக்களாக வருபவர்கள் கூட்டத்தில் வேறு எங்காவது சென்றுவிட்டால் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் பக்தர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இதனால் நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்பட பகுதிகளில் பக்தர்களை கண்டுபிடிப்பதற்காக தகவல் மையத்தின் முன் கூட்டம் அலைமோதுகிறது.

Related Stories: