×

டிச.25 வரை ஆன்லைன் பதிவு முடிந்தது சபரிமலை செல்ல 30 லட்சம் பேர் முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் முந்தைய வருடங்களை விட இந்த மண்டல காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. நடை திறந்த கடந்த 16ம் தேதி முதல் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். இதனால், பம்பையிலேயே பக்தர்கள் 10 மணிநேரத்திற்கு மேல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் ஏராளமானோர் தரிசனம் செய்யாமல் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போதிய வசதிகள் ஏற்படுத்தாத திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும் வரும் 24ம் தேதி வரை உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 20 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக குறைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த 3 நாட்களாக தினமும் சராசரியாக 74 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கேரள உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து பக்தர்கள் தற்போது சிரமமின்றி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் டிசம்பர் 25ம் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இதுவரை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Pamba… ,
× RELATED முதல்வர் ரங்கசாமி, பாஜ அமைச்சர்...