×

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீம் ஷா வீட்டின் முன் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷாவின் வீட்டின் மீது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நடந்தபோது அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்குள் இருந்ததாகத் கூறப்பட்டுள்ளது.

நள்ளிரவு சுமார் 1:45 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. மர்ம நபர்கள் நசீம் ஷாவின் வீட்டின் பிரதான வாசலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அதிர்ஷ்டவசமாக, வீட்டின் உள்ளே இருந்த நசீம் ஷாவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறியும் முயற்சியில், அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

காவல்துறை அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், இச்சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை என்றும், தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.

Tags : Naseem Shah ,Islamabad ,Pakistan ,Nasim Shah ,
× RELATED உலகம் முழுவதும் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது ஆரக்கிள் நிறுவனம்