×

பாலூட்டும்போது பரிதாபம் 35 நாள் குழந்தை மரணம்

திருமங்கலம், ஆக. 8: கள்ளிக்குடி அருகே தென்னமநல்லூரினை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராதா(26). இவர்களது மகள் மாயாஸ்ரீ(3). இந்நிலையில் 35 நாட்களுக்கு முன் பிறந்த மற்றொரு பெண் குழந்தைக்கு தனுஸ்ரீ என பெயரிட்டு வளர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிளவில் குழந்தை தனுஸ்ரீ அழுததால் தாய் ராதா அவருக்கு பால் கொடுத்துள்ளார்.

பின்பு தொட்டிலில் போட்டு குழந்தையை தூங்கவைத்து தானும் தூங்கியுள்ளார். காலை 6 மணிக்கு குழந்தைக்கு சொட்டுமருந்து கொடுக்க எழுப்பிய போது, அசைவற்று இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிசென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பால் குடித்தவுடன் தூங்கவைத்ததால் புரைபோய் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என, அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்பே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வில்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags : Thirumangalam ,Vellaisamy ,Thennamanallur ,Kallikudi ,Radha ,Mayasri ,Tanushree ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...